"பட்டிமன்றம் நடத்தும் அளவிற்கு பழனிசாமியின் துரோக லிஸ்ட் போய்க்கொண்டே உள்ளது" - மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சியில் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டன, எண்ணற்ற கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை திமுக பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உரிமையோடும் உணர்வோடும் ஆதரவுகேட்டு வந்திருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். 100 நாள் வேலை திட்டத்தை பாஜக அரசு சிதைத்து விட்டது. திமுக ஆட்சியில் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டன, எண்ணற்ற கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டன. அதனால்தான் மதுரை, திருச்சி, காஞ்சிபுரம் போன்ற கோயில் நகரங்கள் திமுகவின் கோட்டைகளாக உள்ளன. திமுக அரசு இந்து விரோத அரசு என பாஜக சொல்லும் பொய்யை பக்தர்கள் நம்ப மாட்டார்கள்.
100 நாள் வேலை திட்டத்தில் துரோகம் இழைத்தவர்தான் இந்த எடப்பாடி பழனிசாமி.100 நாள் வேலை திட்டத்தின் பெயரையும் மாற்றி, பணி நாட்களையும் குறைத்துவிட்டது ஒன்றிய அரசு, இதனை கண்டித்து திமுக போராடியது. விஞ்ஞானி பழனிசாமி இனி 200 நாள் வேலை கிடைக்கப்போவதாக உருட்டினார். சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தும் அளவிற்கு பழனிசாமியின் துரோக லிஸ்ட் போய்க்கொண்டே உள்ளது. அதிமுகவுக்கும் பாஜகவும் தனித்தனியா வந்தாலும் சரி அல்லது கூட்டணியாக வந்தாலும் சரி இரண்டும் வேறு வேறு இல்லை என்று தமிழ்நாட்டு மக்கள் புரிந்து வைத்துள்ளனர். மகளிர் உரிமைத் திட்டம், பட்டா உள்ளிட்டவை மக்களுக்கு எளிதில் கிடைக்க காரணமாக இருந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமிற்கு தடைகேட்டு நீதிமன்றத்திற்கு இபிஎஸ் சென்றார். 2026ல் திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் இனி ஆண்டுதோறும் நடத்தப்படும்” என்றார்.



