அரசு பள்ளியை இடித்து மண்டபம் கட்டும் திமுக- உதயநிதி தொகுதியில் நடக்கும் அவலம்

 
School

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் நின்று எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று அமைச்சரானவர் உதயநிதி ஸ்டாலின். அவரது தொகுதிக்குட்பட்ட பங்காரு தெருவில் அமைந்துள்ளது சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளி. இந்த பள்ளியில் 115 மாணவர்கள் படித்துவருகின்றனர். 80 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த பள்ளியை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டி தருவதாக அப்பகுதி மக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கான டெண்டரும் மாநகராட்சி சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. 

Image

இதனிடையே திமுக கவுன்சிலர் மதன்மோகன், அந்த இடத்தில் சென்னை மாமன்றத்திற்கு திருமண மண்டபம் கட்ட வேண்டும் என மக்கள் விரும்புவதாக கோரிக்கை மனுவை மாநகராட்சிக்கு அனுப்பினார். அதனை ஏற்றுக்கொண்ட மாநகராட்சி, அந்த இடத்தில் திருமண மண்டபம் கட்டும் ஆணை பிறப்பித்ததுடன் அதற்கான பணியையும் முழு வீச்சில் தொடங்கியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக நிர்மல்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், “ சேப்பாக்கம் பங்காரு தெருவில்  80 ஆண்டுகளாக இயங்கி வந்த GCC பள்ளிக்கு வெளியே திரண்ட பெற்றோர் மற்றும் மாணவர்கள், பள்ளியை புனரமைப்பதாக கூறி தற்போது இடித்த பின்னர் சமுதாய கூடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது சமுதாய கூடம் அடுத்து டாஸ்மாக் பார்-ஆ?” என உதயநிதி ஸ்டாலினுக்கு டேக் செய்து பதிவிட்டுள்ளார். 


இதேபோல் அறப்போர் இயக்கம், “பழைய பள்ளியை இடித்து விட்டு புதிய பள்ளி கட்டி தருகிறோம் என்று மாணவர்களை ஏமாற்றி வேறு பள்ளிகளுக்கு விரட்டி விட்ட பிறகு அந்த கட்டிடத்தை இடித்து அங்கே கல்யாண மண்டபம் கட்ட போகிறோம் என்று மாணவர்களை மோசடி செய்த திமுக கவுன்சிலர் மதன்மோகன் மீது அந்த தொகுதி MLA மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? தன்னுடைய தொகுதியில் ஒரு அரசு பள்ளியை இடித்து கல்யாண மண்டபம் கட்டப்படுவதை அவர் ஏற்றுக் கொள்கிறாரா? 


பழைய பள்ளி கட்டிடத்தை இடித்து புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதாக மாநகராட்சி கவுன்சிலில் அனுமதி பெற்று புதிய பள்ளி கட்ட டெண்டர் விடப்பட்டு முடிந்த பிறகு  புதிய பள்ளி கட்டுவதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறைத்து புதிய கல்யாண மண்டபம் கட்ட தீர்மானம் போடும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா இனியாவது விழித்து எழுந்து பேசுவாரா? மீண்டும் பள்ளிக் கட்டிடம் கட்டப்படுவதை உறுதி செய்வாரா?” என கேள்வி எழுப்பியுள்ளது.