தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் - ஜெகன் மோகன் ரெட்டியுடன் திமுக குழு சந்திப்பு!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி உடன் திமுக குழு சந்தித்தது.
நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் எண்ணுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக 7 மாநில பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்ட குழு அமைக்கப்பட்டது. நேற்று இந்த குழுவை சேர்ந்தவர்கள் ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்தனர்.
இந்த நிலையில், இன்று, ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி உடன் திமுக குழு சந்தித்தது. ஜெகன் மோகன் ரெட்டி உடன், அமைச்சர் எ.வ.வேலு, வில்சன் எம்.பி., ஆகியோர் சந்தித்தனர். தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்தனர். தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் பல்லா சீனிவாச ராவையும் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.