மதுரை ஆதீனத்தை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு..!

 
1 1

சென்னை காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த மே 2 ஆம் தேதி மதுரை ஆதீனம் காரில் சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை – சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றாகவும், தன்னை திட்டமிட்டே கொலை செய்ய சதி நடந்துள்ளதாகவும், பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று மதுரை ஆதீனம் பேசியிருந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதுதொடர்பான விசாரணையில் ஆதினத்தின் கார் ஓட்டுநர் அதிவேகமாக காரை இயக்கியதே விபத்துக்கான காரணம் என்பது சிசிடிவி காட்சி மூலமாக தெரியவந்தது. ஆதீனத்தின் பேச்சு மத மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி வழக்கறிஞர் ராஜேந்திரன் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து, ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி மதுரை ஆதீனத்தின் முன் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் காவல் துறை மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், வயது முதிர்ந்த, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை ஆதீனத்தை எப்படியாவது கைது செய்து, கொடுமைப்படுத்த வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியாக இருக்கிறது என்றும், மதுரை ஆதீனம் மீதான அடக்குமுறையை திமுக அரசு கைவிட வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது:-

மதுரை ஆதீனம் மீதான அடக்குமுறையை திமுக அரசு கைவிட வேண்டும். இந்தியாவின் மிகப் பழமையான மடங்களில் ஒன்றான, மதுரை ஆதீனத்தின் 293 வது பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் மீது, இந்து விரோத திமுக அரசு அடக்குமுறையை ஏவி விட்டிருக்கிறது.

கடந்த மே 2ம் தேதி சென்னை, காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற, உலக சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க மதுரை ஆதீனம் காரில் சென்றார். அப்போது உளுந்தூர்பேட்டை அருகே, அவரது கார் விபத்தில் சிக்கியது. இது தன்னை கொல்ல நடந்த சதி என்றும், விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்களின் அடையாளங்களையும் கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து, மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவு செய்த இந்து விரோத திமுக அரசு, அவரை கைது செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டது. அவருக்கு முன் ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம், அவர் வசிக்கும் இடத்திற்கே சென்று விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது. விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனக்கூறி மதுரை ஆதீனத்தின் முன் ஜாமினை ரத்து செய்ய வேண்டுமென, உயர்நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்திருக்கிறது.

வயது முதிர்ந்த, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை ஆதீனத்தை எப்படியாவது கைது செய்து, கொடுமைப்படுத்த வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியாக இருப்பது தெரிகிறது. அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் கூட நடக்காத கொடுமைகள் எல்லாம், திமுக ஆட்சியில் நடக்கிறது. மதுரை ஆதீனம் மீதான அடக்குமுறையை திமுக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.