வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்

வக்ஃப் திருத்தச் சட்டம், 2025-னை எதிர்த்து திமுக சார்பில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் - வக்ஃப் மசோதா தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக்குழு உறுப்பினருமான ஏ.ராசா, எம்.பி., மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், எம்.பி., மூலம் இன்று (07.04.2025), உச்ச நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூக - பொருளாதார மேம்பாட்டிற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. வக்ஃப் (திருத்தம்) மசோதா, 2025 அரசியலமைப்பிற்கு விரோதமானது மற்றும் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் மற்றும் நலன்களை மோசமாக பாதிக்கும் என்பதால், அதை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, மார்ச் 27, 2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஒரு தீர்மானத்தை திமுக அரசு நிறைவேற்றியது. வக்ஃப் திருத்த மசோதா, 2025, நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை முறையாகக் கருத்தில் கொள்ளாமலும் - இச்சட்ட திருத்தம் நிறைவேற்றிட பரவலான எதிர்ப்பு இருந்தபோதிலும் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் திமுக எம்.பி.க்கள் எழுப்பிய கருத்துகளும் பரிசீலிக்கப்படவில்லை.
வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025, 06.04.2025 அன்று அறிவிக்கப்பட்டதிலிருந்து, முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் அடிப்படை உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும், இந்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது தமிழ்நாட்டில் சுமார் 50 லட்சம் முஸ்லிம்களின் உரிமைகளையும், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள 20 கோடி முஸ்லிம்களின் உரிமைகளையும் மீறுகிறது மற்றும் பாரபட்சம் காட்டுகிறது என்பதையும் கருத்தில் கொண்டு, 2025 ஏப்ரல் 6 -அன்று அமலுக்கு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டம்-2025னை ரத்து செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.