பிப்.23 - மார்ச் 8 வரை வீடு வீடாக வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரை

 
mks

பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் மார்ச் 8 வரை ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள் - வீடு வீடாகப் பரப்புரை' மேற்கொள்ளப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. 

Image

இதுதொடர்பாக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “2026 ஜனவரி 13-அன்று சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற “தி.மு.க.மாவட்டச் செயலாளர்கள் கூட்ட”த்தில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள் - வீடு வீடாகப் பரப்புரை’ நடத்திட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு பெண்களுக்கான ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ - ‘விடியல் பயணம்’ - ‘தோழி விடுதிகள்’ - ‘புதுமை பெண் திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு,   மகளிருக்கான ஆட்சியென நடைபெற்று வருகிறது. நமது சாதனைத் திட்டங்களால் பெண்கள் - வெல்லும் தமிழ்ப் பெண்களாக உயர்ந்துள்ளனர்.  பெண்கள் பயனாளிகள் மட்டுமல்ல, மாநில வளர்ச்சியின் பங்குதாரர்கள் என்ற சீரிய சிந்தனையுடன் செயலாற்றும் ‘திராவிட மாடல் அரசு’ நிறைவேற்றியுள்ள நலத் திட்டங்களையும் - ‘பெண்களின் முன்னேற்றமே தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றம்’ எனும் கொள்கை உறுதியுடன் பெண்களுக்கான எண்ணற்ற பல திட்டங்களையும் - சாதனைகளையும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மகளிரிடம் எடுத்து சென்று சேர்ப்பதே இப்பரப்புரையின் நோக்கமாக இருக்க வேண்டும்.

இப்பரப்புரையை, வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளும் விதமாக தி.மு.கழகத்தின் சார்பில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாவட்டச் செயலாளர்களால் வழங்கப்பட்டுள்ள பட்டியலின் அடிப்படையில், 10 மகளிரை கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் சார்பில் ஒரு உறுப்பினர் வீதம் தேர்வு செய்யப்பட்டு தொகுதி அளவிலான பயிற்சிக் கூட்டங்களை நடத்திட வேண்டும்.  “வெல்லும் தமிழ்ப் பெண்கள்”பரப்புபுரைக்கான சட்டமன்றத் தொகுதி வாரியான பயிற்சிக் கூட்டத்தை வரும் பிப்ரவரி 20, 21 மற்றும் 22-ஆம் தேதிகளுக்குள் அனைத்து தொகுதிகளிலும் நடத்தி முடித்திட வேண்டும். இப்பயிற்சியை, சட்டமன்றத் தொகுதி மகளிர் அணி பொறுப்பாளர்கள் வழங்குவர். பயிற்சிக் கூட்டத்தில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரை பற்றிய முழு பயிற்சியும் வாக்குச்சாவடி அளவிலான   மகளிர் குழு பொறுப்பாளர்களுக்கு அளிக்கப்படும். அதன் பிறகு அவர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள இதர உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்து பரப்புரையைத் தொடங்கிட வேண்டும்.

Advertisement

தேர்தலை காரணமாக வைத்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையே முடக்குவதற்கான ஒன்றிய பா.ஜ.க. -- அடிமை அ.தி.மு.க.வின் சூழ்ச்சிகளை முறியடித்து, “ நீ ஆயிரம் ரூபாயை நிறுத்த முயற்சித்தால், நான் என் மக்களுக்கு ரூபாய் ஐந்தாயிரமாக தருவேன்” என சூளுரைத்து பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான தொகையினை முன்பணமாக ரூ.3000/-, கோடைக் கால சிறப்புத் தொகுப்பு ரூ.2,000/- என மொத்தம் ரூ.5000/-த்தினை  தமிழ்நாட்டு பெண்களுக்கு வழங்கிய திராவிட மாடல் அரசின் சாதனைகளையும்  வீடு வீடாக எடுத்துச் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, ‘திராவிடமாடல் 2.0’ ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2,000/-மாக உயர்த்தி வழங்கப்படும் என்ற எனது உறுதிமொழியையும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தடையின்றி தொடர, கழக ஆட்சி தொடர்வது அவசியம் என்பதையும் மகளிர்க்கு உணர்த்திட வேண்டும். வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் “வெல்லும் தமிழ்பெண்கள் - வீடு வீடாகப் பரப்புரை” தொடங்கி, உலக மகளிர் தினமான மார்ச்-8ஆம் தேதிக்குள் அனைத்து வீடுகளையும் சென்றடையும் வகையில் சிறப்பாக நடத்திட வேண்டும். கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கழகத்தின் வெற்றியை உறுதி செய்து மீண்டும் தி.மு.கழகத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திட புறப்பட்டுவிட்டது இந்த ஸ்டாலினின் மகளிர் படை என இப்பரப்புரை சிறப்பிட அமைந்திட வேண்டும். வெல்லும் தமிழ்ப் பெண்கள் பரப்புரைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மண்டல பொறுப்பாளர்கள் - பொறுப்பு அமைச்சர்கள் - மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் செய்துதர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.