#BREAKING புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா - திமுக புறக்கணிப்பு

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை திமுக புறக்கணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1927 ஆம் ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் தற்போது பாதுகாப்பு குறைபாடு, இடவசதி ஆகியவை ஏற்பட்டுள்ளதன் காரணமாக, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ரூ. 970 கோடி ரூபாய் செலவில் நான்குமாடிக்கொண்ட முக்கோண வடிவிலான கட்டடமாக சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வருகிற 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். திறப்பு விழா தேதியான மே 28 சாவக்கரின் பிறந்தநாள். அந்த தேதியை தேர்ந்தெடுத்ததிற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அத்துடன் குடியரசுத் தலைவர் என்ற முறையில் திரௌபதி முர்முதான் நாட்டின் புதிய பாராளுமன்றத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் மே 28ம் தேதி அன்று நடைபெற உள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடியே திறந்து வைப்பதை கண்டித்தும், திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைக்காததை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் இவ்விழாவை புறக்கணிக்கின்றன. அந்த வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுக புறக்கணிக்கவுள்ளதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அறிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம், ஆர்ஜேடி, விசிக உள்ளிட்ட கட்சிகளும் நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.