புதிய குற்றச்சட்டங்களை திரும்ப பெறக்கோரி திமுக வழக்கறிஞர் அணி நாளை உண்ணாவிரதம்

 
போராட்டம் அறிவிப்பு

மூன்று புதிய குற்றச்சட்டங்களை அமல்படுத்திய ஒன்றிய அரசை கண்டித்தும், சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நாளை மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறவுள்ளது. 

Image

இதுதொடர்பாக தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி.வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி,இந்திய திருநாட்டின் நீதி பரிபாலனத்திற்கும் - மாநில சுயாட்சிக்கும் - மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது என்பதோடு, இச்சட்டங்கள் ஜனநாயக நாடாக திகழும் நம் இந்திய திருநாட்டினை, ‘காவல்துறை ஆட்சி நாடாக" மாற்றிவிடும் அரசியல் அமைப்பிற்கு எதிரான - ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க. சட்டத்துறையின் சார்பில், தி.மு.க.சட்டத்துறைச் செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., தலைமையில் நாளை (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் "மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்" நடைபெற உள்ளது.

இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் மாநில, மாவட்ட, நீதிமன்ற தி.மு.க. வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் -  கழக வழக்கறிஞர்கள் மற்றும் கழக முன்னணியினர் - தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பாசிச ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்