அண்ணா, காந்தி காவல் பதக்கங்களை அவமதித்த விஜய்- திமுக குற்றச்சாட்டு
தமிழ்நாட்டின் அண்ணா, காந்தி காவல் பதக்கங்களை அவமதித்து விஜய் டெல்லிக்குச் சேவகம் செய்வதாக திமுக குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக திமுக தனது எக்ஸ் தளத்தில், “முதலமைச்சர் தன் கைவசம் வைத்துள்ள காவல்துறையில், தமிழ்நாடு காவலர்களுக்குப் பதக்கம் வழங்கும் விழாவில், அண்ணா பதக்கமே முதன்மையானது. அதுபோலவே காந்தி காவல் பதக்கமும் மதிப்பிற்குரியது. தமிழ்நாட்டின் இந்த இரு பதக்கங்களையும் இருட்டடிப்பு செய்துவிட்டு, விழா மைதானத்தின் பின்னணியில், 'ஒன்றிய உள்துறை அமைச்சர்' பதக்கத்திற்கு வானளாவிய பிரம்மாண்ட பேனர்களை வைத்துள்ளார் டம்மி முதல்வர் விஜய்!
காவல்துறையினருக்கு வழங்கப்படும் அண்ணா மற்றும் காந்தி பதக்கங்களே தமிழ்நாட்டின் பெருமை. அதை விடுத்து, ஒன்றிய அரசின் பதக்கத்தை மட்டும் வெட்கமில்லாமல் முன்னிலைப்படுத்தி, பெருமைக்குரிய காக்கிச் சீருடை பதக்க விழாவில் காவி நிறத்தைக் காட்டியிருக்கிறது தவெக அரசு. தன் மாநிலப் பதக்கத்தின் மாண்பைக் கூடக் காப்பாற்ற வக்கில்லாத இந்த அரசால், தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

