இது பெரியார் மண்! ஆழ்வார் மண்ணல்ல - 'ஆரிய பாச்சா' இங்கு பலிக்காது!!

 
k veeramani

தமிழ்நாடு ஆளுநர் தனக்கென்று உள்ள அரசமைப்புச் சட்ட ரீதியான பணிகளைச் செய்யட்டும்! இது பெரியார் மண்! ஆழ்வார் மண்ணல்ல - 'ஆரிய பாச்சா' இங்கு பலிக்காது என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  விடுத்துள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசான ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசு ஒரு மேனாள் அய்.பி.எஸ். அதிகாரியான ஆர்.என்.இரவி என்பவரை ஆளுநராக அனுப்பியதி லிருந்து, அவர் மாநில அரசிடம் மோதல் போக்கை உருவாக்கி வருவதோடு, ஆளுநர் வேலையைத் தவிர மற்ற ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ. கட்சியின் பிரச்சாரகர் போலவே செயல்பட்டு, நாளொரு மேனியும், பொழு தொரு வண்ணமும் சர்ச்சைகள் ஏற்படுத்தும் வகையில் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியைப்போல அன்றாடம் செயலாற்றி வருகிறார்! இது மகாவெட்கக்கேடு! அவர் தனது கடமையை ஆற்றத் தவறியவர் என்பதை பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம், குட்டு வைத்ததுபோல, தனது  தீர்ப்பில் குறிப்பிட்ட பிறகும்கூட - யாருடைய தைரியத்திலோ அல்லது கண் ஜாடையிலோ, விவகாரம், வில்லங்கம் - இவற்றையே பேசி, நாளும் மக்களின் எதிர்ப்பினை மலைபோல் பெறுகின்றார்.

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் வாங்கிய குட்டு!

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சுமார் 20 மசோதாக்களை கிடப்பில் போட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பான ஆட்சி - முதலமைச்சர் என்று ஏடுகளால் பாராட்டப்படும் ஆட்சியை, சுதந்திர மாகச் செயல்பட விடாமல் முட்டுக்கட்டைப் போடுகிறார்!

தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதாகவே இவரது இந்த அடாவடிப் போக்கும், அவசியமற்ற சனாதனத்தைப் பரப்பிடும் பேச்சும் ஒருபுறம், பல பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் நிரப்பப்படாமையால் பல மாதங்கள் ‘தலையில்லா முண்டம்போல' அப் பல்கலைக் கழகங்கள் இயங்கும் இக்கட்டான நிலை மறுபுறம்!

தற்கொலைகள் தொடரும் நிலையில், 

ஆன்-லைன் மசோதாவுக்கு 

ஒப்பம் வழங்காத ஆளுநர்!

ravi

ஆன்-லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை கூடிவரும் அவல நிலையைத் தடுக்க தி.மு.க. அரசு நிறைவேற்றிய சட்ட முன்வரைவை பல மாதங்கள் ஆன நிலையில்,  அப்படியே வைத்திருப்பது கடமை தவறிய ஆளுநரின் பொறுப்பின்மை மட்டுமல்ல; மனிதாபிமானமற்ற உயிர் பறிக்கும் அலட்சியப் போக்கும் ஆகும்! அவசர சட்டத் துக்கு அனுமதி அளித்துவிட்டு, சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவைக் கிடப்பில் போடுவது எப்படி? ஏனிந்த இரட்டை வேடம்?

இந்த நிலையில், ‘‘கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை'' என்ற பழமொழியைபோல,

‘‘திராவிடம் - பிரிவினைவாதம்'' என்றெல்லாம் அபத்தமாகப் பிதற்றுகிறார்!  நாம் கேட்கிறோம்:

ஒவ்வொரு அரசு நிகழ்ச்சியின் இறுதியிலும் நாட்டுப் பண் (National Anthem)) ‘ஜனகன மன' என்று தொடங்கிப் பாடும்போது, ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நிற்கிறோமே, அதில் வரும் ‘திராவிட உத்கல வங்கா' என்றால், பிரிவினை என்று கூறி, இவர் எழாமல் நிற்பாரா?

‘திராவிடம்' அதன் வரலாற்றை ஆய்வு செய்தால், அது மக்கள் இணைந்திருக்கும் தத்துவம் - ஒன்றுபடுத்தும் தத்துவமே தவிர, பிரிப்பது அல்ல; அல்லவே அல்ல என்பது புரியும்.

‘யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனார் பாட்டு முதல் - ‘அனைவரும் உறவினர்' என்ற பாரதி தாசன் ஆத்திச்சூடி வரை - மக்களை ஒருங்கிணைப்பது தவிர வேறு என்ன?

வந்தேறிகளான ஆரியர்கள் ஜாதி - வர்ணம் என்று பிரித்ததுதான் பிரிவினைவாதம்!

இன்னும் ஒருபடி மேலே போய்க் கூறுவது என்றால், வந்தேறிகளான ஆரியம் மக்களிடையே - ஜாதி, வர்ணம் என்று கூறி பிறப்பினில் பேதம் கற்பித்தல் கூடாது என்று, ஓங்கி மண்டையிலடித்துக் கூறிய தத்துவம்தான் திராவிடம்.

‘திராவிடம்' என்பது அரை வேக்காட்டுத்தனமாக ஏதோ வெள்ளைக்காரர்களால் புகுத்தப்பட்ட வாதம் என்ற புனைவுரையை மறுத்து, மனுதர்மத்தில் 10 ஆவது அத்தியாயத்தில்  (மனுதர்ம சாஸ்திரத்தில் 10ஆம் அத்தியாயத்தில் ‘சங்கர ஜாதி’ என்ற தலைப்பின்கீழ் ஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்கள், அனுசரிக்காதவர் களுக்குப் பிறந்தவர்கள் ‘திராவிடர்’ என்ற பெயர் கொண்டவர் என்றும், சூத்திரன் பிராமண ஸ்தீரியைப் புணர்ந்தால் பெறப்படும் குழந்தைகள் பாக்கிய ஜாதியர் என்றும், அதாவது சமீபத்தில் வரக்கூடாத ‘சண்டாள ஜாதி’ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

veeramani

மற்றும் பிராமணர்களுக்கு சூத்திர ஸ்தீரிகளிடத்தில் பிறந்த குழந்தைகள் ஆர்யா வர்த்த தேசத்தில் ‘செம்படவன்’ என்ற ஈன ஜாதியாகச் சொல்லப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

மற்றும் ஜாதி தர்மம் தவறிய கலப்பினால் பிறப்ப வர்களால்தான் தோல் வேலை செய்யும் (சக்கிலி) ஜாதியும், பிணத்தின் துணியைப் பிடித்துக் கொள்கிற வர்களும் எச்சில் சாப்பிடுகிறவர்களுமான (பறையர்) ஜாதியும் ஏற்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

“திராவிட தேசத்தை ஆண்டவர்கள் சூத்திரர்களாய் விட்டார்கள்” என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக் கிறது. இது மனு 10ஆம் அத்தியாயம் 44ஆம் ஸ்லோகம் ஆகும்.) 

உள்ள வரிகளை நாம் பலமுறை சுட்டிக்காட்டியும், திருந்தாத ஜென்மங்களாக காவிகள் பலர் உளறுகிறார்கள். இன்று அவர்களைப் பின்பற்றி, தமிழ்நாடு ஆளுநர் என்ற அரசுப் பணியாளர் - மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் பெற்று, அதில் மாளிகை வாசமும் செய்துகொண்டு இப்படிப் பிதற்றுவது அவர் வகிக்கும் பதவிக்கே இழுக்கு அல்லவா?

நாட்டில் ஆரிய தேசம் - திராவிட தேசம் என்று முன்பு பிரித்தவர்கள், திராவிட இயக்கத்தவர்களா?

காசியில் ''ஹிந்து'' கல்லூரியை

உருவாக்கியவர் யார்?

காசியில் தற்போதுள்ள காசி ஹிந்துப் பல்கலைக் கழகம், முன்பு ‘பனாரஸ் சென்ட்ரல் ஹிந்து காலேஜ்' ஆக இருந்துதான், மதன்மோகன் மாளவியா போன்றவர்களால் பல்கலைக் கழகமாக உயர்த்தப்பட்டது.

அந்த ‘ஹிந்து காலேஜில்' 1916 இல் (நீதிக்கட்சி உதயம் அந்த ஆண்டுதான்) வெளியிட்டுள்ள,

'''SANATANA DHARMA' AN ELEMENTARY TEXT BOOK OF HINDU RELIGION AND ETHICS''

என்ற பாட புத்தக நூலில், தொடக்கத்திலேயே உள்ள பகுதியை அப்படியே தருகிறோம்.

''SANATANA DHARMA means the Eternal Religion, the Ancient Law, and it is based on the Vedas, sacred books given to men many long ages ago. 

This Religion has also been called the Aryan Religion, because it is the Religion that was given to the first Nation of the Aryan race; Arya means noble, and the name was given to a great race, much finer in character and appearance than the races which went before it in the world's history. The first families of these people settled in the northern part of the land now called India, and that part in which they first settled was named Aryavarta, because these Aryans lived in it. "(The land) from the eastern ocean to the western ocean, between the two mountains (Himayan and Vindhya), the wise call Aryavarta''

ஆரிய வர்த்தத்தையும், திராவிட தேசத்தையும் (மனுநீதி கூறுகிற இதர தேசங்களை) இணைத்து ஒரே நாடு ஆக்கியதற்குக் காரணம்  பிரிட்டிஷ்காரர்களா? என்று வரலாறு அறிவு தெரிந்தவர்கள் கூறட்டும்.

பிறப்பில் பிரிவினை  - படிப்பில் பிரிவினை - 

யார் காணம்?

பிரிவினை ‘‘திராவிடமா? ஆரியமா?

அதுமட்டுமா?

படிப்பில் பிரிவினை -

உயர்ஜாதியினர் படிக்கலாம் - கீழ்ஜாதியினர் படிக்கவே கூடாது. மீறிப் படித்தால், நாக்கை அறு, காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று!

மக்கள் ஜாதியில் கீழ்ஜாதிக்கும் கீழானவர்கள்.

rn ravi

Out Caste

பெண்கள் படிக்கவே கூடாது - அடிமைகள்தான்; இந்தப் பேதங்களை ஏற்படுத்தியது ஆரியமா? திராவிடமா? என்ற தி.மு.க. பொருளாளர், நாடாளு மன்ற உறுப்பினர் மானமிகு டி.ஆர்.பாலு அவர்கள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் ஆளுநர் அவர்களே?
நம்பும் கடவுளிடம் நெருங்கி பூஜை செய்வதற்குக்கூட அனைத்துப்  பக்தர்களுக்கும் உரிமை உண்டா?

ஆகமம் படித்தாலும் அர்ச்சகர் ஆகும் உரிமை கிடையாது என்று - அதை எதிர்த்து வழக்குப் போட்டு, வம்பு வளர்க்க நீதிமன்றங்களை நாடுவோர் பிரிவினை வாதிகளான ஆரியர்களா? திராவிடத்தவர்களா?

இப்படி அடுக்கடுக்கான கேள்விக் கணைகள் பாயவே செய்யும்!

எனவே, இனியும் பிதற்றாதீர் ஆர்.எஸ்.எஸ். பிரச்சார பாத்திரமேற்கும் ஆளுநரே!

இது பெரியார் மண்!

ஆரியப் பாச்சா பலிக்காது!

தமிழ்நாடு பெரியார் மண் - நீங்கள் உளறுவதுபோல ஆழ்வார் மண் அல்ல - 69 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை ‘அவாள்கள்' கையொப்பத்தோடு நிறைவேற்றி வைத்து வெற்றி பெற்ற மண்!

சமூகநீதியை விதைத்துப் பாதுகாக்கும் மண்! இங்கே சமூக அநீதி ஆரியத்தின் ‘பாச்சா' பலிக்காது!

இதனை உணர்ந்து, ஆளுநர் பணியை ஒழுங்காக செய்யுங்கள் என்று எச்சரிப்பார்கள் தமிழ் மக்கள்.

காரணம், நீங்கள் அவர்களது பணியாளர் என்பதை மறவாதீர்! கடமை துறவாதீர்!!

தமிழ்நாடு என்று அழைக்காமல், ‘தமிழகம்' என்று கூறவேண்டுமாம். இதுவே பிரித்தாளும் சூழ்ச்சிதானே - புரிந்துகொள்வீர்! ‘ஆந்திர பிரதேசம்' என்று இருக்கிறதே - ‘நாகாலேண்ட்' என்றெல்லாம் இல்லையா?

எனவே, ‘‘வெளியேறு, வெளியேறு, கடமை தவறிய ஆளுநரே, வெளியேறு!'' என்பதே இனி முழக்கமாகட்டும்! " என்று குறிப்பிட்டுள்ளார்.