தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு: தொடங்கிய 5 நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்... முடங்கிய ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம்!

 
IRCTC Train Ticket Booking

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளத்தில் பொதுமக்கள் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

உணவு ஆர்டர், அறைகள் முன்பதிவு உட்பட பல்வேறு வசதியுடன் இந்த இணையதளம் செயல்படுகிறது. ஆனாலும் இதில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட இணையதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக ரயில்வே அறிவித்தது. எனினும் பயணியர் அவதிப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. இந்தாண்டு தீபாவளி பண்டிகை, நவம்பர் 8ல்கொண்டாடப்படுகிறது.

தற்போது, 60 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. நவ.5ம் தேதி பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் முடிந்தது. நவ.6ம் தேதி பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று நடந்தது. முன்பதிவு தொடங்கிய ஐந்து நிமிடங்களில், தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில், முன்பதிவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

அதேசமயம், லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்ய முயன்றதால், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் முடங்கியது. இதனால் டிக்கெட் கிடைக்காமல், பயணியர் சிரமத்திற்குள்ளாகினர்.