"அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது"- சசிகலா தரப்பு வாதம்

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்து, எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்த தன்னை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பு வாதத்தை எடுத்துரைத்தது.
அதிமுக பொதுச்செயலலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் அடுத்த பொது செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுத்தக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொது செயலாளர் இல்லாமல் கூட்டபட்ட பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும் இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனவும் கூறி சசிகலாவின் வழக்கை நிராகரித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பு வழக்கறிஞர், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்து, எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்த தன்னை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது, கடந்தாண்டு ஜூலையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் நீக்கப்பட்டு, பொதுச் செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டது. ஆகவே பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. சசிகலாவின் இந்த மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.