"நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? " பிரபல நாளிதழுக்கு முதல்வர் கடும் கண்டனம்

 
tn

காலை உணவு திட்டம் குறித்த தினமலர் செய்திக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு  வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில்,  முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை, கடந்த 25ஆம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

tn

இந்த சூழலில் பிரபல நாளிதழான தினமலரில் காலை உணவு திட்டம் மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் எல்லோருக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது.வீட்டில் சாப்பிட்டு வரும் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததும் அங்கும் சாப்பிடுகின்றனர். இதனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் இயற்கை உபாதைக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான்  திராவிடப் பேரியக்கம். 



'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.

நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! 

#தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்! என்று பதிவிட்டுள்ளார்.