டிஐஜி வருண்குமார் தொடந்த வழக்கு- சீமான் நாளை நேரில் ஆஜராக உத்தரவு

சீமானுக்கு எதிராக திருச்சி டி.ஐ.ஜி தாக்கல் செய்த அவதூறு வழக்கில் சீமான் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் நாளை சீமான் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசினார். இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4 நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று அந்த வழக்கு தொடர்பாக சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இன்றைய தினம் வழக்கு விசாரணை குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி விஜயா முன்னிலையில் நடந்தது இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராகவில்லை. அதனால் வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா இன்று மாலை 5 மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். மீண்டும் அந்த வழக்கு மதியம் 3 மணிக்கு நடைபெற்றது அப்பொழுது திருச்சி சரக டிஐஜி வருண் குமார் நேரில் ஆஜராகினார். இந்த வழக்கில் சீமான் தலைப்பில் ஆஜராகிய வழக்கறிஞர்கள் சீமான் ஏற்கனவே வேறொரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டதால் இன்று வர முடியவில்லை. நாளை அவர் ஆஜராவார் எனவே வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
வருண் குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் வழக்கின் எதிரியான சீமான் சினிமா பார்க்க செல்கிறார், கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார் வேறு பல நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார். ஆனால் நீதிமன்ற மாண்பு என்னவென்று தெரியாமல் உள்ளார் என குற்றம் சாட்டி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து நாளை கண்டிப்பாக நீதிமன்றத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். வழக்கு விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஐஜி வருண் குமார் தரப்பு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன், சீமானுக்கு நீதிமன்றம் மாண்பு தெரியவில்லை அவர் நீதிமன்றத்தை மதிப்பதில்லை. நாளை அவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அவர் நாளையும் ஆஜரவாகவில்லை என்றால் உரிய நடவடிக்கை நீதிபதி எடுக்க உத்தரவிடுவார் என தெரிவித்தார்.