டிஐஜி வருண்குமார் வழக்கு- பிப்.19 ஆம் தேதி சீமான் ஆஜராக உத்தரவு

சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் தாக்கல் செய்த வழக்கில் பிப்ரவரி 19ஆம் தேதி சீமான் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்தனர். அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும் செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாக பேசினார்.
இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற எண் 4 நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி நீதிபதி பாலாஜி முன்பு நேரில் ஆஜராகிய வருண்குமார் இந்த வழக்கு குறித்து தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து அந்த வழக்கு விசாரணை ஜனவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது அன்றைய தினம் வருண் குமார் சார்பில் இரண்டு சாட்சிகள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். வாக்குமூலத்தை பதிவு செய்த நீதிபதி பாலாஜி விசாரணையை ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நீதிபதி பாலாஜி முன்பு நடைபெற்றது. வருண் குமார் சார்பில் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் ஆஜராகினார் வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி பாலாஜி வழக்கு விசாரணையை பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் மேலும் அன்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.