இனி சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் தினந்தோறும் செல்லலாம்- மாவட்ட நிர்வாகம்

 
சதுரகிரி மலைக்கோயில்

சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் தினந்தோறும் செல்லலாம்  என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு  கடந்த காலங்களில்  தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்  10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர். இதனை அடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இனி சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் தினந்தோறும் செல்லலாம்  என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரட்டுமே சோதனை சாவடி வழியாக அனுமதி எனவும், மாலை 4 மணிக்குள் திரும்ப வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிய அனுமதியின்றி மலையில் தங்கியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.