ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து தேமுதிக இமாலய வெற்றி பெரும் - விஜயகாந்த்..

 
 தேமுதிக - விஜயகாந்த்


தேமுதிக பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுந்து வருங்காலத்தில் இமாலய வெற்றி பெரும் என அக்கட்சித் தலைவர்  விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அக்கட்சித் தொண்டர்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான். தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாள் வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் பண மழை பொழிந்தது.எந்த தொகுதியிலும் நடைபெறாத வகையில் வாக்காளர்களை காலை முதல் மாலை வரை பட்டறையில் அடைத்து வைத்த கொடூரமும் அரங்கேறியது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால் அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம், ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற பணப்பட்டுவாடாவை தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.

தேமுதிக

ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டது. இது ஜனநாயக் ரீதியில் நடைபெற்ற தேர்தல் அல்ல. முழுக்க முழுக்க பணத்தை நம்பியே நடைபெற்ற தேர்தல். இனிமேல் நடைபெறும் இடைத்தேர்தல்களில் எந்த கட்சியின் வேட்பாளர் மரணம் அடைகிறாரோ, அந்த கட்சியில் உள்ள ஒரு நபரையே எம்எல்ஏவாக அறிவித்து விடுங்கள். எதற்காக இந்த கண்துடைப்பு நாடகம். பணபலம் அதிகாரபலம், ஆட்சி பலத்தை எதிர்த்து நமக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்குகளும் ஆயிரம் மடங்கு சமம். இது உண்மைக்கும், நேர்மைக்கும் கிடைத்த வாக்குகள் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக வேட்பாளர் அறிவிப்பு

மேலும், இடைத்தேர்தலில் இரவு பகல் என பாராமல் உழைத்த நமது நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகளை கண்டு நமது கழக நிர்வாகிகள் துவண்டு விடாதீர்கள், கவலைப்படாதீர்கள். பீனிக்ஸ் பறவைபோல் மீண்டெழுந்து வருங்காலத்தில் இமாலய வெற்றி பெறுவோம் என்றும் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தருமமே வெல்லும்” என்று தெரிவித்திருக்கிறார்.