“ஸ்டாலின் தமிழகத்திற்காக மட்டும் அல்ல, இந்தியாவுக்காகவும் போராடுகிறார்”- அரவிந்த் கெஜ்ரிவால்
சென்னை புளியந்தோப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரையில் ஈடுபட்டார்.
பரப்புரையில் பேசிய டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போல ஒரு தலைவர் உங்களுக்கு கிடைக்கமாட்டார். தமிழ்நாட்டுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளார்.தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கு பாடுபடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் போல வேறு எந்த மாநிலத்திலும் ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை. பிரதமர் மோடிக்கு எதிராக வலுவான குரல் கொடுக்கும் தலைவர் ஸ்டாலின்.அதிமுக தற்போது பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதை முழுமையாக கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. நிதிஷ்குமார் பீகாரில் சந்தித்த அரசியல் நிலை போன்றதே அதிமுகக்கும் ஏற்படும். ஸ்டாலினின் நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என்றால், மக்கள் திமுக ஆட்சியை ஆதரிக்க வேண்டும்.
டெல்லியில் நாங்கள் கொண்டுவந்த பல நலத்திட்டங்களை தற்போதைய பாஜக அரசு நிறுத்திவிட்டது. தமிழ்நாட்டில் அதிமுக உடன் இணைந்து பாஜக ஆட்சிக்கு வந்தால் இங்கேயும் பல நலத்திட்டங்களை நிறுத்திவிடுவார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பான பணிகளை செய்துள்ளார். பல சாதனைத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அதனால்தான் அவருக்காக பிரச்சாரம் செய்ய நான் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறேன்.” என்றார்.


