புதுச்சேரியில் SIR பணிகளுக்கு பின் 1.03 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில்1 லட்சத்து 3 ஆயிரத்து 477 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் பத்து சதவீதம் என்று புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு முன்பாக 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் பணிக்கு பிறகு 9 லட்சத்து 18 ஆயிரத்து 111 வாக்காளர்கள் உள்ளனர். இப்பணியில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 467 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது முன்பு இருந்த வாக்காளர்களின் அடிப்படையில் பத்து சதவீதம் ஆகும்.
இதில் இறப்பு காரணமாக 20, 798 பேரும் (2 சதவீதம்), குடிபெயர்ந்தோர் மற்றும் அவவிடத்தில் வசிக்காதோர் என 80 ஆயிரத்து 645 பேரும் (8 சதவீதம்), பட்டியலில் இரண்டு முறை இருந்த 2.024 பேரும் நீக்கப்பட்டனர். தற்போதுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 9.18 லட்சம் பேரில் 2002ல் வாக்களித்த ஆவணம் தரப்படாத கண்டறிய முடியாதோரும் இடம் பெற்றனர். அதன் அடிப்படையில் 71,428 பேருக்கு நோட்டீஸ் அனுப்புவோம். அவர்கள் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து உறுதி செய்யவேண்டும்.
வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் புதுச்சேரியில் ராஜ்பவன் தொகுதியில் 18 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக புதுச்சேரி ராஜ்பவனில் 4680 பேரும், காரைக்கால் வடக்கு 5129 பேரும், காரைக்கால் தெற்கில் 4422 பேரும், காமராஜர் நகரில் 6525 பேரும், உழவர்கரையில் 6139 பேரும் நீக்கப்பட்டுள்ளனர். மாஹே தொகுதியில்தான் இருப்பதிலேயே குறைவாக 898 பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.


