மேட்டூர் அணையிலிருந்து ஒரு நாள் கூடுதலாக தண்ணீர் திறக்க முடிவு

 
நிரம்பியது 120 அடி மேட்டூர் அணை ! 12 மாவட்டங்களுக்கு அலர்ட் !

விவசாயப் பெருமக்களின் நலன் கருதி மேட்டூர் அணையிலிருந்து ஒரு நாள் கூடுதலாக தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவமழை பொழிவு குறைவாக பெய்த காரணத்தாலும், காவிரி நதி நீர் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக்கோரி விவசாய பெருமக்களிடமிருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் விவசாய பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து 2 TMC தண்ணீரை 03.02.2024 முதல் திறந்து விட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உத்திரவிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து 03.02.2024 அன்று 6000 கனஅடியும் 04.02.2024 முதல் 09.02.2024 வரை நாளொன்றுக்கு 5000 கனஅடி வீதமும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு மேற்கொள்ளப்பட்டது.


தற்போது மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் போதுமான அளவு காவிரி டெல்டா பகுதியில் உள்ள பாசன நிலங்களுக்கு கடைமடை வரை செல்வதற்கு ஏதுவாக கால நீட்டிப்பு செய்யுமாறு விவசாய பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாய பெருமக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயப் பெருமக்களின் நலன் கருதி பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிரினைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து ஒரு நாள் கூடுதலாக அதாவது 10.02.2024 வரை தண்ணீர் திறக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயப் பெருமக்கள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.