சனாதனம் குறித்து விவாதிக்க பா.ஜ.க.வினர் தயாரா? - டி.ராஜா கேள்வி

சனாதனம் குறித்து விவாதிக்க பா.ஜ.க.வினர் தயாரா? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். சிலவற்றை ஒழிக்க வேண்டும், எதிர்க்க முடியாது. டெங்கு, மலேரியாவை போன்று சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என கூறினார். இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி தலைக்கு 10 கோடி என அயோத்தியை சேர்ந்த சாமியார் அறிவித்துள்ளார். ஆனால் இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் உதயநிதி, எனது தலையை சீவ பத்து கோடி? எதற்கு பத்து ரூபாய் சீப்பு போதுமே என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார். சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், சனாதனம் குறித்து விவாதிக்க பா.ஜ.க.வினர் தயாரா? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜாவிடம் செய்தியாளர்கள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய டி.ராஜா, சனாதனம் குறித்து மக்கள் மன்றத்தில் விவாதிக்க அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தயாரா என கேள்வி எழுப்பினார். சனாதனம் என்பது எந்தவித மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாத ஒரு தத்துவம் எனவும், அது தான் இன்று பிரச்சனைக்கான அடிப்படை காரணமாக இருக்கிறது எனவும் கூறினார்.