அரசுப் பள்ளியில் மாணவர், ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு! சக மாணவர் வெறிச்செயல்

திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் ஒருவரை சக மாணவரே வெட்டியதில் மாணவர் படுகாயமடைந்தார். தடுக்க சென்ற ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளியான அங்கு பன்னிரண்டாம் வகுப்பு வரலாற்று பிரிவில் இன்று அந்த வகுப்பில் பள்ளியின் அக்கவுண்ட்ஸ் ஆசிரியரான சிவகுமார் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அதே பள்ளியில் உயிரியியல் பாடப்பிரிவில் படிக்கும் மற்றொரு மாணவர் அந்த வகுப்பிற்குள் சென்று வகுப்பிலிருந்த மாணவர் ஒருவரை அரிவாளால் வெட்டியுள்ளார். அதில் அந்த மாணவருக்கு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது ஆசிரியர் சிவக்குமார் அதை தடுக்க முயன்ற போது அவரையும் அந்த மாணவர் தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார்.
காயமடைந்த இருவரும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் காயம் பட்ட மாணவர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே அனைத்து மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் வகுப்பில் இருக்கும் பொழுது மாணவரையும் ஆசிரியரையும் பள்ளியில் பயிலும் சக மாணவர் வெட்டிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.