“பெண் மேயர் என்பதால் என்னை அதிகாரிகள் மதிப்பது கிடையாது... ஏன் என்னை நிகழ்ச்சிக்கு அழைக்கிறீர்கள்?”- கடலூர் மேயர் கேள்வி

பூமி பூஜை நிகழ்ச்சிக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்தும் அதிகாரிகள் யாரும் வராததால் டென்சனான கடலூர் மேயர் சுந்தரி ராஜா, பெண் மேயர் என்பதால் என்னை அதிகாரிகள் மதிப்பது கிடையாது, பின்பு ஏன் என்னை நிகழ்ச்சிக்கு அழைக்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார்.
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் 2.24 கோடி மதிப்பீட்டில் புதிய கடைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் வந்தார். அப்போது துணை மேயர் தாமரைச்செல்வன், ஒப்பந்ததாரர் ஆகியோர் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் இல்லை. இதனை பார்த்த சுந்தரி ராஜா, இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்த காரணத்தினால் இங்கு வந்தேன். ஆனால் அதிகாரிகள் யாரும் இல்லையா? என கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து ஒப்பந்ததாரரிடம் மக்கள் பயன்படும் வகையில் தமிழக அரசு திட்டங்கள் செயல்படுத்தி வருவதாலும், தற்போது இந்த பணியை எந்தவித பாதிப்பின்றி நடைபெற வேண்டி நான் தொடங்கி வைக்கிறேன் எனக் கூறி அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். அப்போதுதான் மாநகராட்சி உதவி பொறியாளர் பாரதி மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர், இதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உதவி பொறியாளர் பாரதியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதில் மாநகராட்சி சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கி வைப்பதற்காக குறிப்பிட்ட நேரம் தெரிவித்து உள்ளீர்கள்... அந்த நேரத்தில் சம்பவ இடத்திற்கு நான் நேரில் வந்தால் எந்த அதிகாரியும் நேரில் வருவதில்லை. மேலும் கடந்த ஐந்து நிகழ்ச்சிகளாக இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகின்றது. மேலும் நான் சம்பவ இடத்திற்கு வரும்போது அதிகாரிகள் எதற்காக நிகழ்ச்சியை புறக்கணிக்கிறீர்கள்? நான் பெண் மேயர் என்பதால் நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை புறக்கணிக்கிறீர்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து உதவி பொறியாளர் பாரதி இனி வருங்காலங்களில் சரியான நேரங்களில் நிகழ்ச்சிக்கு நேரில் வருகிறோம் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாநகராட்சி பெயர் சுந்தரி ராஜா பணிகள் தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரிடம் தெரிவித்து கோபமாக சென்றார்.