கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்து : முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..

 
stalin


கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள சிவனார்புரம் பகுதியில் தனியார் பட்டாசு தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு  ஆலையில் நேற்று ( மார்ச் 5 ) மாலை அரியாங்குப்பம் ஓடைவெளி பகுதியை சேர்ந்த 10 பேர் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.  அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது.  இதில் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த மல்லிகா (60) என்கிற பெண் உயிரிழந்தார்.  மேலும் பல பேர் காயமடைந்தனர். இந்நிலையில் இந்த  விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்கப்படும் என  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்து : முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடலூர் மாவட்டம் மற்றும் வட்டம் மதலப்பட்டு மதுரா, சிவனார்புரம் கிராமத்தில் இயங்கிவந்த தனியார் வெடிபொருள் தயாரிக்கும் ஆலையில் நேற்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த மல்லிகா, (60) என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

இவ்விபத்தில் கடுமையான மற்றும் லேசான தீக்காயங்களுடன் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுமதி (45), பிருந்தா தேவி. (35), லட்சுமி. (24),  செவ்வந்தி, (19), மற்றும் அம்பிகா, த/பெ.இராஜேந்திரன் (18), ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். “ என்று கூறியுள்ளார்.