ஆற்றில் குளித்த சிறுவனை கடித்துக்கொன்ற முதலை..!
உ.பி பஹ்ராயிச் மாவட்டத்தில் கடந்த 16-ம் தேதி வயல் வேலை முடித்துவிட்டு அருகில் உள்ள ஆற்றில் தனது உறவினருடன் குளித்துக்கொண்டிருந்த சுனில் (12) என்ற சிறுவனை முதலை ஒன்று கடித்துக்கொன்று இழுத்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பஹ்ராயிச் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் சுனில். இச்சிறுவன் கடந்த வியாழக்கிழமை தனது உறவினருடன் வயலுக்கு சென்றுள்ளான். வயலில் வேலை செய்துவிட்டு அருகில் உள்ள ஆற்றில் சிறுவனும், அவரது உறவினரும் குளித்துள்ளனர்.
அப்போது, ஆற்றில் இருந்த முதலை குளித்துக்கொண்டிருந்த சிறுவனை கடித்துக்கொன்று இழுத்து சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் தீவிர தேடுதலுக்குப்பின் சிறுவனின் உடல் பாகங்களை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

