ஜல்லிக்கட்டில் 2-ம் இடம்பிடித்த மாடுபிடி வீரர் ரஞ்சித் மருத்துவமனையில் அனுமதி

 
ரஞ்சித்

மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு , முதல் சுற்று முடிவடைந்த நிலையில் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் நான்கு பேர் பலத்த காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 


தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் காலை 7 மணிக்கு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்புக்கு பின் அமைச்சர் பி.மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் ஆகியோர் போட்டியினை கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இதனையடுத்து இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 435 மாடுபிடி வீரர்களும் 10 சுற்றுகளாக அனுமதிக்கப்பட்டதோடு 817 காளைகளும் அவிழ்க்கப்பட்டது. 9 சுற்றுகளிலும் இருந்து குறைந்தது 5 காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி சுற்றில் கலந்துகொண்டனர்.

விதவிதமான பெயர்களில் அவிழ்க்கப்பட்ட காளைகள் வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் களத்தில் நின்று விளையாடி வீரர்களை மிரட்டி வெற்றிபெற்று பரிசுகளை அள்ளி சென்றது. போட்டியின் போது காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் கைதட்டியும் ஆரவாரம் செய்தும் உற்சாகபடுத்தினர். போட்டியின் போது திறம்பட விளையாடி 17 காளைகளை அடக்கிய மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக்கு முதல் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் நிசான் கார் மற்றும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் கன்றுடன் கூடிய கறவை பசுவும் பரிசாக வழங்கப்பட்டது.

இதேபோன்று போட்டியில் சிறப்பாக விளையாடிய சிறந்த காளைகளான அவனியாபுரம் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் மறைந்த GR கார்த்திக் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளைக்கு முதல் பரிசாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிசான் காரும்,  மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் கன்றுடன் கூடிய கறவை பசுவும் வழங்கப்பட்டது, இதனைத்தொடர்ந்து 2 ஆவது இடம் பிடித்த மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமாருக்கு ஒரு பீரோ மற்றும் சைக்கிளும், 2ஆவது இடம் பிடித்த சிறந்த காளையான திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ சீனிவேலு காளைக்கு ஒரு பீரோ மற்றும் சைக்கிள் பரிசாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியின்போது 2400 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

போட்டியில் காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள் ,குக்கர், கட்டில், சைக்கிள் , சில்வர் அண்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன. காலை 7 மணிக்கு தொடங்கிய போட்டியானது மாலை 5மணி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் வி.கே.சசிகலா, டிடிவி தினகரன், திருமாவளவன் ஆகியோர பெயரில் அவிழ்க்கப்பட்ட காளைகள் வெற்றி பெற்றன. போட்டியின் முடிவில் சிறந்த 2 மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகோப்பைகளும், பரிசுகளும் பாராட்டு சான்றுகளை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் ஆகியோர் வழங்கினர்..

போட்டியில் மாடு குத்தியதில் 2 காவல்துறையினர் உட்பட மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளைஉரிமையாளர்கள் , உள்ளிட்ட 51 பேர் காயமடைந்த நிலையில் 10பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.