புதிய தலைமை செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடு- லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான அரசின் மேல்முறையீடு வழக்குகளில், தன்னை இணைக்கக் கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தனின் மனுவிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம், கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி திறக்கப்பட்டது. அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அரசு, புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி அது குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் 2011 டிசம்பரில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆணையத்தை கலைத்து உத்தரவிட்டதுடன், இந்த முறைகேடு தொடர்பாக சேகரித்த ஆதாரங்களை புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படி 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. அதனடிப்படையில், இது சம்பந்தமாக விசாரணை நடத்த அனுமதி அளித்து 2018ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து முக ஸ்டாலின், துரைமுருகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், இதே விவகாரம் தொடர்பாக 2018ம் ஆண்டு செப்டம்பரில் பொதுத்துறைக்கு புகார் அளித்ததாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள திமுக, இந்த வழக்கில் விசாரணை நடத்த அக்கறைகாட்டவில்லை என்பதால், 2018ம் ஆண்டு தான் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், அரசின் மேல்முறையீட்டு வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி்.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி, அரசியல் நோக்கத்திற்காக ஜெயவர்த்தனால் இந்த புகார் அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
2018ம் ஆண்டிலிருந்து தற்போது வரை விசாரணை நடத்தியும் லஞ்ச ஒழிப்பு துறையால் எந்த ஆதராமும் கண்டுபிடிக்க முடியவில்லை, என்பதால் மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, தன்னையும் வழக்கில் இணைக்கக் கோரி ஜெயவர்த்தன் தாக்கல் செய்த மனு குறித்து இரண்டு வாரங்களில் தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.