புதுச்சேரியில் புதிதாக 1,471 பேருக்கு கொரோனா..
புதுச்சேரியில் மேலும் புதிதாக 1,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியதன் பேரில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள போதிலும், கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.. சொல்ல வேண்டுமானால் கட்டுப்பாடுகளுக்குப் பிறகே இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது.
ஆனால் புதுச்சேரியில் இதுவரை எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. அங்கு புத்தாண்டு கொண்டாட்டக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், அன்றைய தினம் புதுச்சேரி கடற்கரையே நிரம்பி வழிந்தது. ஏராளமானோர் அங்கு திரண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அதன் பிறகு புதுச்சேரியில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,471 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சேரியில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 673 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் தற்போது 5 ஆயிரத்து 568 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளிலும், வீட்டுத்தனிமையிலும் சிகிக்சை பெற்று வருகின்றனர்.