கொரோனா அச்சத்தால் சாணி பவுடரை தின்று தற்கொலை - முதல்வருக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்!!

 
ops mk stalin

கொரோனா அச்சத்தால் ஏற்படும் தற்கொலையைத் தடுக்க ஆலோசனைகள் வழங்குமாறு திமுக அரசை  ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கல்லுமேடு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த லட்சுமி தனது மூத்த மகளை இழந்த வருத்தத்தில் இருந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் தனது கணவரும் உயிரிழந்ததை அடுத்து, போதிய வருமானமின்றி தன்னுடைய மகன் ,இரண்டாவது மகள் மற்றும் பேரக் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், இரண்டாவது மகள் ஜோதிகாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

ops

இதனையடுத்து சுகாதாரத்துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் ஜோதிகாவை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியதோடு, ஊராட்சி சார்பில் அவரது வீட்டில் கிருமி நாசினி மற்றும் பிளீச்சிங் பவுடர் போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  இதையறிந்த அருகில் உள்ளவர்கள் ஜோதிகாவின் குடும்பத்தை சேர்ந்த யார் வெளியே வந்தாலும் அவர்களிடம் இருந்து விலகிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டதால் அந்த குடும்பத்தினர் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளானதுடன், தொற்று தங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் வந்துவிடுமோ? அதனால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடுமோ? என்ற அச்சத்திற்கு தள்ளப்பட்டனர்.

இந்த அச்சத்தின் காரணமாக லட்சுமி, அவரது மகள் ஜோதிகா, மகன் சிபிராஜ் மற்றும் பேரன் ரித்தீஷ் ஆகிய 4 பேரும் சாணி பவுடர் உணவில் கலந்து சாப்பிட்டு ஆபத்தான முறையில் அனைவரும் வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் மயங்கி கிடந்ததாகவும், பின்னர் ஆம்புலன்சில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் ,அங்கு மருத்துவர்கள் நடத்திய சோதனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜோதிகா மற்றும் அவரது மகன் ரித்தீஷ் இறந்ததாகவும்,  லட்சுமி மற்றும் சிபிராஜ் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.  இது அந்த பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ops

இந்த செய்தி எனக்கு ஆற்றொணாத் துயரமும் , மிகுந்த மனவேதனையும் அளித்துள்ளது . மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு என்னுடைய அஞ்சலியை  செலுத்துவதோடு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.  மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாமல் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையையும், அந்த குடும்பத்தில் உள்ளவர்களின் மனநிலையையும், அக்கம்பக்கத்தினனால் அவர்களுக்கு ஏற்பபட்ட  மன உளைச்சலையும், அவர்களுடைய பொருளாதார நிலையையும் ஆராய்ந்து அதற்கேற்ப, அவர்களுக்கு உதவி புரிவதும், ஆலோசனைகளை வழங்குவதும்,   விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஒரு அரசாங்கத்தின் கடமை. இதை செய்ய அரசு நிர்வாகம் தவறுகின்றதோ என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மருத்துவ ரீதியாக உதவுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய மன நிலையை அறிந்து அதற்கேற்ப ஆலோசனைகளையும் ,விழிப்புணர்வையும் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் மேற்படி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.