மீண்டும் வெடித்த சர்ச்சை..! அமைச்சர் நிர்மல் குமார் நிகழ்ச்சியில் 3-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து..!

 
1

மதுரை அத்யபனா பள்ளியின் 'Anti Drug Club' மூலம் போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், ’Say No To Drugs' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களிடையே உரையாற்றினர். பின்னர் பேரணியை கொடியசைத்து வைத்து பள்ளி மாணவர்கள் நடைபயண நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் மதார் பதுருதீன், கோபிசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களோடு இணைந்து நடை பயணம் மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு பள்ளியின் பாடல்கள் மற்றும் கடவுள் வாழ்த்துகள் பாடப்பெற்ற பின்னர், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவது பாடப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் மூன்றாவதாக பாடப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து மாணவர்கள், போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பியபடி நடை பயணம் மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “இப்போது பள்ளிகளில் எளிதாக போதைப்பொருள் கிடைக்கிறது. சாக்லேட் போன்ற வடிவிலும் கிடைக்கிறது. அதுபோன்று தெரிந்தால் ஆசிரியரிடம் சொல்லலாம். இது உங்கள் அண்ணனது அரசு, நீங்களெல்லாம் சேர்ந்து உருவாக்கிய அரசு.

இந்த ஆட்சியில் 100% உரிமை உங்களுக்கு தான் உள்ளது. நீங்கள் பள்ளிக்கு செல்லும் போது இடையூறு வந்தாலோ, போதைப்பொருள் பயன்பாடு குறித்து ஏதாவது சந்தேகம் ஏற்பட்டாலோ எந்த பயமும் இல்லாமலும், எங்களிடம், ஆசிரியர்களிடமும் புகார் அளிக்க வேண்டும். உங்களுக்கு வேலை பார்க்க தான் நாங்கள் இருக்கின்றோம். இப்போது உள்ள காவல்துறை முன்பு போல இல்லை. உங்கள் போலிஸ், உங்களது அரசு. உங்களுக்கு வேலை பார்க்க தான் இருக்கின்றோம்.

நீங்க அழைத்தால் உங்களுக்காக வேலை பார்க்க உடனே வருவோம். குழந்தைகளின் பாதுகாப்பு தான் உங்களது முதலமைச்சருக்கு முதல் முன்னுரிமை” என்றார்.