ஏப்.1 முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்படாது - குடிநீர் வாரியம் அறிவிப்பு..

ஏப்ரல் 1ம் தேதி முதல் குடிநீர் கட்டணங்களை செலுத்த நுகர்வோர் அட்டை வழங்கப்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் குடிநீர் கட்டணம் செலுத்தும் நுகர்வோர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நுகர்வோர் அட்டை சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கப்படுகிறது. தற்போது, 2020-ஆம் ஆண்டின் I/2020-21 முதல் II/2024-25 வரையிலான கால கட்டத்திற்கு அனைத்து நுகர்வோர்களுக்கும் நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது குடிநீர் கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்துவதை ஊக்குவிக்கவும், வரிசையில் காத்திருக்கும் நேரத்தை தவிர்க்க மற்றும் காகித பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே குடிநீர் கட்டணம் செலுத்திய பின்னர் நுகர்வோர் அட்டையில் எந்த பதிவும் செய்யப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய நுகர்வோர் அட்டை வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இணைய வழியிலான கட்டண நுழைவாயிலைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாக நுகர்வோர் குடிநீர் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், UPI, QR குறியீடு மற்றும் PoS போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையவாயிலாகவே நுகர்வோர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை தெரிந்துகொள்ளவும், பணம் செலுத்திய இரசீதினை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியுமென்றும், மேலும் வசூல் மையத்தில் பணம் செலுத்தும்போது அளிக்கப்படும் கணினி இரசீது பணம் செலுத்தியதற்கான பதிவாக கருதப்படும் என்றும் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.