திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி ஏதும் இல்லை - செல்வப்பெருந்தகை
சட்டமன்ற தேர்தலில் திமுக உடனான கூட்டணி உறுதி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இன்று முன்னாள் ஒன்றிய உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் பத்து நிமிடம் வரை முதலமைச்சர் முக ஸ்டாலின் உடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தடைந்தார். அங்கு ப.சிதம்பரத்துடன் மேற்கொண்ட ஆலோசனைக்கு பின் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம். சட்டமன்ற தேர்தலில் திமுக உடனான கூட்டணி உறுதி. திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்துவருகிறது. முடிந்த பிறகு சொல்வோம். திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. திமுக எங்களுக்கு கெடு விதிக்கவில்லை. பேச்சுவார்த்தையில் இழுபறியும் இல்லை. ராகுல்காந்தியும் முக ஸ்டாலினும் எப்போதும் சகோதரர்கள் தான்” என்றார்.

