“தமிழக மாணவர்களுக்காக உயிரே போனாலும் பரவாயில்லை” - காங். எம்.பி. சசிகாந்த் விடிய விடிய உண்ணாவிரதம்
தமிழக மாணவர்களுக்கு தரவேண்டிய கல்வி நிதியை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்ககோரி திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை இரவு தொடர்ந்து நீடித்து வருகிறார்.
2024-2025 கல்வி ஆண்டுக்கான தமிழகத்திற்கு தரவேண்டிய சமக்ரா சிக்சா' கல்வி நிதியான 2,152 கோடி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அத்தகைய நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் இருப்பதால் 43 லட்சம் மாணவர்கள் 2.2 லட்சம் ஆசிரியர்கள் பாதிப்படைய கூடும் என்பதால் தமிழகத்திற்கு தரவேண்டிய கல்வி நிதியை விடுவிக்க கோரி திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் திருவள்ளூரில் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தில் நேற்று மதியம் ஒன்றிய அரசை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
நள்ளிரவு தொடங்கியும் சசிகாந்த் செந்தில் தனது உண்ணாவிரத போராட்டத்தை தனது ஆதரவாளர்களுடன் இணைந்து போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார். அவர் உண்ணாவிரத போராட்டத்திற்கு அறம் திரைப்படம் இயக்குனர் கோபி நயினார் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அதேபோன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் மாணவர்கள் அவருக்கு தொலைபேசி மூலமாக ஆதரவு தெரிவித்தனர்.


