108 இடங்களில் வென்ற தவெகவை அழைக்காமல், ஒரு இடத்தில் வென்ற பாஜகவை ஆட்சியமைக்க அழைக்க முடியுமா?- ஜோதிமணி காட்டம்
108 இடங்களில் வென்ற தவெகவை ஆட்சியமைக்க அழைக்காமல், ஒரு இடத்தில் வென்ற பாஜகவை ஆட்சியமைக்க அழைக்க முடியுமா? என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில், “ஆளுநர் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றால்_ 108 இடங்களில் வெற்றிபெற்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ள பாஜகவை, மாண்புமிகு ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க முடியுமா? திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு வரம்பற்ற அதிகாரம் எதுவும் கிடையாது. அவர் அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர் என்று உச்சநீதிமன்றம் பலமுறை தெளிவாகக் கூறியுள்ளது.
த.வெ.க வின் தலைவர் திரு.விஜய் அவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார். அவர் கூட்டணி என்று கடிதம் கொடுத்தாலும் , த.வெ.க தனிப்பெரும் கட்சி தான். தனிப்பெரும் கட்சியின் தலைவரை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆட்சி அமைக்க அழைப்பது தான் சரியானது. ஆட்சி அமைத்த பிறகு பெரும்பான்மையை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க முடியும். ஆதரவுக் கடிதம் தர வேண்டிய அவசியம் இல்லை. திரு.மோடி, திரு.அமித்ஷா அவர்களின் அழுத்தத்திற்குப் பணிந்து தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை மாற்றி எழுத நினைப்பது மாபெரும் தவறு. இதை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

