தலைக்கவசத்தால் வந்த தலைவலி...புது சிக்கலில் டிடிஎஃப் வாசன்!

டிடிஎஃப் வாசன் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஹெல்மெட்டை பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலு செட்டி சத்திரம் அருகே பைக்கில் சென்ற போது வீலிங் செய்ய முயன்றதில் நிலை தடுமாறு கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தில் அவரது கை, கால் முறிந்துள்ளது. அது தவிர பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் (IPC 279/337), டி.டி.எஃப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. டிடிஎஃப் வாசன் மீது ஏற்கனவே இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. பிணையில் வர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்யவும் போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது. இதனிடையே டிடிஎஃப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் டிடிஎஃப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில், டிடிஎஃப் வாசன் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். விபத்தில் சிக்கிய போது கைப்பற்றப்பட்ட தலைக்கவசத்தால் அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த தலைக்கவசத்தில் ஐ.எஸ்.ஐ தரச்சான்று முத்திரை இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக டிடிஎஃப் வாசன் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட அந்த ஹெல்மெட்டை பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. மேலும் டிடிஎஃப் வாசன் பயன்படுத்திய தலைக்கவசத்தின் மதிப்பு சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.