டெல்லியில் பெரும் பரபரப்பு: ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி மீது புகார்!

 
1

டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் காங்., தேசிய தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், அக்கட்சியின் பார்லி., குழு தலைவர் சோனியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேசியக் கொடியை ஏற்றும் முன், வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. பாடல் பாடப்பட்டுக் கொண்டிருக்கும் போது, சோனியாவும், கார்கேவும் தங்களை சுற்றியிருப்பவர்களைப் பார்த்து, பாடலை நிறுத்தும்படி சைகை செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ராகுலும் அதே போன்ற சைகையை செய்தார். இருப்பினும் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்பட்டது.


இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய நிலையில், பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். வந்தே மாதரம் பாடலை அவமதித்ததாக, கர்நாடகாவில் சோனியாவுக்கு எதிராக பா.ஜ., நிர்வாகி விகாஷ் புத்துார் என்பவர் போலீசில் புகார் அளித்தார்.
இதற்கிடையே, இதே விவகாரம் தொடர்பாக டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குனால் விநாயக், சுப் ஷர்மா ஆகியோர், நேற்று முன்தினம் போலீசில் புகார் அளித்தனர். இந்தப் புகாரில், வந்தே மாதரம் பாடலை அவமதித்த சோனியா மற்றும் ராகுல் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டுள்ளனர். இப்புகாரின்படி, டில்லி போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.