"வயிற்றுப் பசியை தீர்ப்பதற்கான இந்த திட்டம் வரவேற்கத்தக்கது" - ராமதாஸ் ட்வீட்!!

 
pmk

காலை உணவுடன் பாலும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 tn

 அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.  கடந்த மே மாதம் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பேசியபோது,  அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.  அதன் அடிப்படையில் இன்று இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  மாநகராட்சி, நகராட்சி ,ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1545 அரசு தொடக்கப் பள்ளிகளிலும் பயிலும்  ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்த நிதி ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டுள்ளது. சென்னையில் 36 பள்ளிகளில் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 


இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் 1545 தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அறிவுப்பசி தேடி அரசு பள்ளிகளுக்கு  வரும் ஏழைக் குடும்ப மாணவர்களின் வயிற்றுப் பசியை தீர்ப்பதற்கான இந்த திட்டம் வரவேற்கத்தக்கது ஆகும்! அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கைகளில் தவறாமல் இடம் பெற்ற இந்த அறிவிப்பு நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறைந்த அளவிலான பள்ளிகளில் தான் தொடங்கப்படுகிறது. இது அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். காலை உணவுடன் பாலும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்! " என்று பதிவிட்டுள்ளார்.