காதல் விவகாரம்- கல்லூரி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

 
suicide

பூந்தமல்லி அருகே கல்லூரி மாணவி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

suicide


திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, ஸ்ரீகாளிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகள் ஜெயா(19), இவர் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வந்தார். இந்த கல்லூரியில் உள்ள விடுதியிலேயே இவர் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு கல்லூரி விடுதியில் உடனிருந்த மாணவிகள் இரவு படிப்பிற்காக சென்றுவிட்டனர்.  

தனக்கு தலை வலிப்பதாகவும், அதனால் இரவு படிப்பிற்கு வரவில்லை என்றும் மற்ற மாணவிகளிடம் ஜெயா கூறியுள்ளார். பின்னர் விடுதியில் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் தனியாக இருந்த ஜெயா, துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து உடன் தங்கியிருந்த மாணவிகள் வந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  இதையடுத்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக மாணவியை மீட்ட கல்லூரி நிர்வாகத்தினர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நசரத்பேட்டை போலீசார், ஜெயாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவரது செல்போனை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது, தொடர்ந்து அந்த காதலனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.