டாட்டூ குத்தியதால் கல்லூரி மாணவர் மரணம்
![death](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/f146cf8ededae4895ede2eb1306abf07.jpg)
பெரம்பலூர் அருகே கழுத்துப் பகுதியில் டாட்டூ குத்தியதால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரை சேர்ந்த 22 வயதான பரத், கடந்த 20 நாட்களுக்கு முன் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பச்சைக்குத்தும் கடைக்கு சென்ற அவர், நங்கூரம் படத்தை டாட்டூ குத்திக் கொண்டார். அதன்பின் சுற்றுலா முடிந்து சொந்த ஊர் திரும்பிய பரத், வயல் வெளியில் விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது டாட்டூ குத்திய இடத்தில் கட்டி உருவாகி வலி அதிகரித்துள்ளது. அந்த பகுதியில் இருந்த நரம்பு பாதிக்கப்பட்ட நிலையில், கடுமையான வலியால் துடித்தார். உடனே அவரை குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள், பரத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றியுள்ளனர்.
இருப்பினும் சிகிச்சை பலனளிக்காததால் பரத் உயிரிழந்ததாக தெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்க்கரை நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதுபோன்று டாட்டூ குத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் டாட்டூக்களில் பயன்படுத்தப்ப்படும் ரசாயன மைகள் ஒவ்வாமையை சிலருக்கு ஏற்படுத்தும் என அறிவுறுத்தும் மருத்துவர்கள், ஏதாவது சிறு பிரச்சனை என்றாலும் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.