சோளா பூரியில் கரப்பான் பூச்சி! பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி

 
கரப்பான்பூச்சி

உணவில் கரப்பான் பூச்சி வெந்து கிடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து மயிலாடுதுறையில் உள்ள உயர்தர சைவ ஹோட்டலில் நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில் உள்ள புகழ்பெற்ற சைவ உணவகமான காளியாகுடி ஹோட்டலில் நேற்று சோளாபூரி உணவருந்திய சங்கரன்பந்தலை சேர்ந்த வழக்கறிஞர் பூபாலன், கலியமூர்த்தி ஆகிய இருவர் உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக குற்றம் சாட்டினர். இதையடுத்து ஒவ்வாமை ஏற்பட்ட அவர்கள் மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். 

இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு சென்றதையடுத்து, மயிலாடுதுறை நகராட்சி உணவு பாதுகாப்புதுறை அலுவலர் குற்றசாட்டுக்கு ஆளான ஹோட்டலில் சோதனை நடத்தினார். உணவில் கிடந்தது கரப்பான்பூச்சி இல்லை, வெட்டுக்கிளி கிடந்ததாக உணவக நிர்வாகத்தினர் தெரிவித்தனர். சோதனையில்  சமையலறை பகுதி தூய்மையாக பராமரிக்கப்படவில்லை என்பதும் சமையல் பொருட்கள் முறையாக மூடி வைக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. உணவு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படாததால் உணவகத்துக்கு நோட்டீஸ் வழங்கிய உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் 7 நாட்களுக்குள் குறைபாடுகளை சரிசெய்து அறிக்கை வழங்க உத்தரவிட்டார்.