தமிழறிஞர் பேராசிரியர் சுப.திண்ணப்பனுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

 
tn

சிங்கப்பூர் வாழ் தமிழர் முனைவர் சுப.திண்ணப்பன் அவர்களுக்கு சால்வை அணிவித்து 'உங்களில் ஒருவன்' புத்தகத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதற்காக கடந்த 23ஆம் தேதி  சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

tn
இந்நிலையில் சிங்கப்பூர் வாழ் தமிழர் முனைவர் சுப.திண்ணப்பனை  தமிழ் சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்து, புத்தகம் வழங்கி சிறப்பு செய்தார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்ப் போற்றும் சிங்கை வாழ் தமிழறிஞர் பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்களை இன்று சந்தித்தேன். என்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலான 'உங்களில் ஒருவன் - முதல் பாகம்' நூலினை வழங்கி, அவரை வரவேற்றுப் போற்றினேன்.

தமிழும் தமிழர் நலமும் காக்கும் நமது அரசின் பணிகளைப் பாராட்டினார். தமிழ்ப் பண்பாட்டை உலகுக்குக் காட்சிப்படுத்தும் கீழடி அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், பொருநை அருங்காட்சியகமும் சிறப்புற அமைந்திட வாழ்த்தினார். 



சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் சிலவற்றை நமது அரசு ஏற்கனவே செயல்படுத்தி வருவதைத் தெரிவித்து, மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவோம் என உறுதியளித்தேன். முத்தமிழறிஞர் கலைஞரின் மகனான நான் சொன்னதை நிச்சயம் நிறைவேற்றுவேன் எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

அதே நம்பிக்கையைத்தான் நீங்களும் என் மீது கொண்டிருக்கிறீர்கள். அதனைக் காக்கும் என் பணிதான் தமிழுக்கும் தமிழர்க்கும் தொண்டாற்றுவது என்று நெஞ்சுக்குள் நினைந்து மகிழ்ந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.