100 நாள் வேலை தொடர்பாக பட்டும் படாமல் அழுத்தம் கொடுக்கிறார் இபிஎஸ் : முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்..!

 
1 1

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

மக்களைக் காக்கக் குரல்கொடுக்கச் சொன்னால், டில்லியைக் குளிர்விக்க எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கை விட்டுள்ளார். நாம் தட்டி எழுப்பிய பின் துயில்கலைந்து, 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றத்தை மட்டும் கைவிடக் கோரிப் 'பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்' தனது ஸ்டைலில் 'அழுத்தம்' கொடுத்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. அத்தோடு, 100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயரவுள்ளதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
 

125 வேலை நாட்கள் என்பது பேப்பரில் மட்டுமே இருக்கப் போகிறது என அனைவருமே சுட்டிக்காட்டியும் அறியாத அப்பாவியா அவர்? மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் சாதனை படைத்ததற்காக, மறுவரையறை மூலமாகத் தமிழகத்தின் தொகுதிகளைக் குறைக்கப் பார்ப்பதைப் போலவே, வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்ததற்குத் தண்டனையாகத் தமிழகத்துக்கான வேலை நாட்களைக் குறைக்கப் போகிறார்கள் என நான் சுட்டிக்காட்டியிருந்ததை வசதியாக மறந்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்.
 

மத்திய அரசின் நிதியில் செயல்படுத்திய 100 நாட்கள் வேலை திட்டத்தைச் சிதைத்து, நிதிச் சுமையை மாநிலங்களின் தலையில் கட்டுவதைப் பற்றியும் வாய்திறக்க அவருக்கு வலிக்கிறது போலும். தனது 'Owner' பாஜ செய்வது சரி என்றால், துணிச்சலாக, வெளிப்படையாக, 100 நாட்கள் வேலைத்திட்டம் தொடர்பான புதிய மசோதாவை பழனிசாமியால் ஆதரிக்க முடியுமா? சவால் விடுகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.