"காமராஜர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

 
tn

தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் உறுதிகொள்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 120ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் பெருந்தலைவர் காமராசர். காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து  1919 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார். 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார்.  இதனைத் தொடர்ந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வந்தார். 

tn

பின்னர்  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளர் , விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,  விருதுநகர் நகர்மன்றத் தலைவர்,  விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கினார். அத்துடன் 1954 ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக  தேர்வுபெற்று  தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அனைவரும் கல்விகற்க வேண்டும் என்று எண்ணிஇலவச மதிய உணவுத்திட்டம், இலவச கல்வி, கட்டாயக்கல்வி உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியதுடன், பல்வேறு பள்ளிக்கூடங்களை நிறுவினார். இதன் காரணமாகவே கல்விகண்திறந்த கர்மவீரர் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.



இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை #கல்விவளர்ச்சிநாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்!  போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்!  கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்! தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.