மனிதநேயமும் ஒருவகை ‘திராவிட மாடல்‘தான்... முதல்வர் ஸ்டாலின் பேச்சு!!

 
tn

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை பல்லவன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரமலான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  1600 இஸ்லாமியர்களுக்கு புத்தாடை, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். 

இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "இன்று மிகச்சிறப்பாக இந்த ரமலான் நிகழ்ச்சி எழுச்சியோடு மட்டுமல்ல - உணர்ச்சியோடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நானும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்பது என்ற அந்த வழக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பவன்.இந்த மாதம் இசுலாமிய பெருமக்களுக்கு புனிதமாகக் கருதும் மாதமாக அமைந்திருக்கிறது. ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து பலருக்கும் குறிப்பாக, ஏழை - எளியவர்களுக்கு உதவி செய்து, இந்த மாதத்தை நாம் கொண்டாடி வருகிறோம். நம்முடைய மாவட்டச் செயலாளர் - மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சொன்னதுபோல, தங்களை வருத்திக்கொண்டு, அதாவது உணவு உண்ணாமல் நோன்பு இருந்து இந்த உதவிகளை செய்து வருகிறார்கள். இந்த ரமலான் மாதத்தில் செய்யும் உதவிகள் மனித நேயத்தின் மறு உருவமாக காட்சியளிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ்நாட்டின் இந்த மனிதநேயம் இன்றைக்கு நாடு முழுமைக்கும் ஒரு மாடலாக உருவாகியிருக்கிறது. இதுவும் ஒருவகை ‘திராவிட மாடல்‘தான். இதைச் சொன்னால் பலருக்கு எரிச்சல் வரும் - ஆத்திரம் வரும் - கோபம் வரும். அதற்கெல்லாம் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. ‘எல்லோருக்கும் எல்லாம் - அனைவருக்கும் உதவி சேர வேண்டும்‘ இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கை! இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இலட்சியம்! அந்த அடிப்படையில்தான் நாங்கள் ‘திராவிட மாடல்... திராவிட மாடல்’ என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

tn

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் என்ற அந்த முறையில் இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில் 2016-ஆம் ஆண்டிலிருந்து இந்த ரம்ஜான் வருகிறபோது, உங்களைப் போன்றவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை நான் தொடர்ந்து வழங்கி வருகிறேன். ஏழாவது வருடமாக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.உங்கள் முகம் மலர்வதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதைத்தான் அறிஞர் அண்ணா அவர்கள் தத்துவமாக எடுத்துச் சொன்னார்கள், ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்‘. அந்த வழிநின்று, நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய வழிகாட்டுதலோடு, இப்போது நாம் ஆளுங்கட்சியாக இருந்திருக்கலாம், ஆனால் நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோதே, நாம் எதிர்க்கட்சியா? ஆளுங்கட்சியா? என்று பார்க்காமல் இந்த பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.ஏழை - எளிய மக்களுக்கு சாதி, மத, இன வேறுபாடின்றி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். நலத்திட்ட உதவிகள் மட்டுமல்ல கல்விக்கான உதவியும் தொடர்ந்து வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. இன்றைக்கு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். ஏற்கனவே கடந்த 24-ஆம் தேதி நடந்த இப்தார் நிகழ்ச்சியைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் சிறுபான்மை அணியின் சார்பில் அந்த விழாவைத் தென் சென்னை பகுதியில் நடத்தினோம். அந்த நிகழ்ச்சியில் நான் இந்தச் சிறுபான்மைச் சமுதாய மக்களுக்கு என்னென்ன பணிகளை? என்னென்ன திட்டங்களை? சாதனைகளை? திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்தபோது செய்திருக்கிறோம் - இப்போது செய்து கொண்டிருக்கிறோம் - இன்னும் தொடர்ந்து செய்யப்போகிறோம் என்பதை விரிவாக - விளக்கமாக எடுத்துப் பேசியிருக்கிறேன்.

tn

அதையெல்லாம் நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒன்றை மட்டும் நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நாம் ஏற்கனவே 2006-ஆம் ஆண்டு ஒரு கூட்டணி அமைத்து, அந்தக் கூட்டணியின் தயவில் ஆட்சியில் இருந்தோம். அப்படி இருந்த நேரத்தில், எதிர்க்கட்சியில் இருந்த அ.தி.மு.க. நம்மைப் பார்த்து என்ன சொன்னார்கள் என்றால், ’ இது ஒரு மைனாரிட்டி ஆட்சி... மைனாரிட்டி ஆட்சி’ என்று நம்மை விமர்சனம் செய்வது போல - கொச்சைப்படுத்தி பேசுவதுபோல - நம்மைக் கிண்டல் செய்வதுபோல - கேலி செய்வது போல ஒரு கருத்தைத் தொடர்ந்து எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது நம்முடைய முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் எழுந்து ஒரு பதில் சொன்னார்,  ‘எங்களைப் பார்த்து நீங்கள் மைனாரிட்டி ஆட்சி... மைனாரிட்டி ஆட்சி என்று சொல்கிறீர்கள். உண்மைதான். மைனாரிட்டிக்களுக்காக நடைபெறும் ஆட்சிதான் இந்த ஆட்சி’ என்று அப்போது சொன்னார்கள்.எனவே இது தொப்புள் கொடி உறவு. அதனால்தான் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை கொண்டுவந்தபோது, அதை எதிர்த்து அன்றைக்கு நாம் குரல் கொடுத்தோம் - போராடினோம் - எதிர்த்து வாக்குகளையும் போட்டோம். ஆனால் அதை நாம் மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தபோது, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து, அந்த அவசர சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று தீர்மானம் போட்ட கட்சிதான் தி.மு.க. - திமுக ஆட்சி.

tn

எனவே எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது எதிர்த்தோம். ஆளுங்கட்சியாக வந்ததற்கு பிறகு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினோம். தீர்மானத்தை முன்மொழிந்தவன்தான் இன்றைக்கு முதலமைச்சராக உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கும் இந்த ஸ்டாலின். சிறுபான்மை மக்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்ன கட்சி யாரென்று உங்களுக்கு தெரியும். ஆனால் அந்த இடஒதுக்கீட்டை அளித்து, அந்த 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை தந்து, இன்றைக்கு டாக்டர்களாக - இன்ஜினியர்களாக - வழக்கறிஞர்களாக - பட்டதாரிகளாக இந்த சிறுபான்மை சமுதாயத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அலுவலகங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்து இன்றைக்கு நாம் பெருமைப்படுகிறோம், மகிழ்ச்சி அடைகிறோம். சிறுபான்மை மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை முடக்கியது அ.தி.மு.க. ஆட்சி. ஆனால் அந்த மக்களுக்கு அந்த கழகத்தை மீண்டும் பொலிவோடு செயல்பட வைத்தது, சிறுபான்மை மக்களுக்கு பெரும் நலத்திட்ட உதவிகளை தொழில் தொடங்க நிதி உதவிகள் கிடைக்க வைத்து, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்த ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. இவ்வாறு எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் சரி, ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் சரி, சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்து வருவதுதான் உங்கள் வீட்டுப் பிள்ளையான திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகம் உங்கள் வீட்டுப் பிள்ளை என்றால், அதில் நானும் உங்களில் ஒருவன். அதனால்தான் இதுபோன்ற நலத்திட்டங்களை – உதவிகளை, அதுவும் ரமலான் விழாவினை 2016-இல் இருந்து நான் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.

tn

நான் எப்போதும் உங்களோடு இருக்கக்கூடியவன். நீங்களும் எப்போதும் என்னோடு இருக்கக்கூடியவர்கள். அதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் - சிறுபான்மைச் சமுதாயத்திற்கும் இடையே இருக்கும் ஒரு நல்லுறவு - நம்பிக்கை உறவு என்று கூறி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் அத்தனை பேருக்கும் என்னுடைய ரமலான் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்து, மீண்டும் மீண்டும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன். நன்றி! வணக்கம்! " என்றார்.