வருவாய் பற்றாக்குறை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது அதிமுக - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சிவகங்கை மாவட்டத்தை வளர்த்ததில் திமுக ஆட்சிக்கு முக்கிய பங்கு உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்டார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதேபோல் பல்கலைக்கழக வளாகத்தில் வளர்தமிழ் நூலகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இரண்டாவது நாளாக இன்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார். ரூ.1.6 கோடியில் மருது சகோதரர்களுக்கு சிலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சிவகங்கையில் ரூ.376 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 45 பணிகளை தொடங்கி வைத்தார். காரைக்குடியில் பகுத்தறிவு கவிஞன் முடியரசனுக்கு ரூ.50 லட்சத்தில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள வாளுக்கு வேலி அம்பலத்தின் உருவச்சிலையை திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொருவரின் குடும்பத்திலேயும் அண்ணனாக, தம்பியாக, தந்தையாக, நண்பனாக இருக்கிறேன். வீரமும், விவேகமும் விளைந்த மண் சிவகங்கை. சிவகங்கை மாவட்டத்தை வளர்த்ததில் திமுக ஆட்சிக்கு முக்கிய பங்கு உள்ளது. சிவகங்கை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை திமுக அரசு கொடுத்துள்ளது. எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த புதிய ஆட்சியர் அலுவலகம் கட்டப்படும்திருப்பத்தூரில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும் காரைக்குடியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டப்படும். வருவாய் பற்றாக்குறை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது அதிமுக என கூறினார்.