தமிழக மீனவர்களை மீட்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 34 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே 25.01.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (26.01.2025) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படும் மற்றொரு சம்பவத்தை மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 25.01.2025 அன்று ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை (தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 மீனவர்கள்) தனுஷ்கோடி அருகே அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்று கவலைபடத் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படும் சம்பவங்கள், கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே பதட்டத்தையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்துவதோடு அவர்களது எதிர்காலத்தை நிச்சயமற்றதாகவும், இருண்டதாகவும் ஆக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே நமது மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்க உறுதியான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கவும் தூதரக வழிமுறைகள் மூலம் தேவையான அவசர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.