பொருநை அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 
mk stalin

நெல்லையில் அமையவுள்ள பொருநை அருங்காட்சியத்திற்கான கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நெல்லை மாநகரில் பொருநை  நாகரிகத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் உலகத்தரம் வாய்ந்த  அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்படும் இந்த அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளையில் அகழாய்வு மூலம் கிடைத்த பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தப்படும் என்றும் என்று அவர் அறிவித்தார்.  இதனையடுத்து  நவம்பர் மாதம் முதல்  நெல்லையில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள்  ஈடுபட்டு வந்தனர். அதன்படி, பாளை கே.டி.சி. நகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் 4 வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில்  13 ஏக்கர் நிலத்தில்  பொருநை அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.  அமைச்சர் தங்கம் தென்னரசு அந்த  இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மொத்தம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் உலகத்தரத்தில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

இந்நிலையில், பொருநை அருங்காட்சியத்திற்கான கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். உலக தரத்தில் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கான கட்டுமான பணிகளுக்கு காணொலி காட்சியின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.