சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்கள் - ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர்

 
mk stalin

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தமிழகம் சார்பில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர், வீரங்கனைகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். 

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 160 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக 2 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் 76 பயிற்றுனர்களுக்கான பணி நியமன ஆணைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. 

இதன் அடையாளமாக 8 வீரர், வீராங்கனைகளுக்கும், 8 பயிற்றுனர்களுக்கும் காசோலை, பணி நியமன ஆணை மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.