சிபிசிஐடி விசாரணை...காவல் துறையினர் பணியிட மாற்றம் : பேரவையில் முதல்வர் விளக்கம்!!

 
tn

திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

r

சட்டப்பேரவையில் திருவண்ணாமலை விசாரணை கைதி தங்கமணி உயிரிழந்த சம்பவம் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், " கடந்த ஏப்ரல் 29 அன்று எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இந்த அவையில் நேரமில்லா நேரத்தில் பேசியபோது, திருவண்ணாமலை சம்பவம் குறித்து இந்த அவையினுடைய கவனத்திற்கு அவர் கொண்டு வந்தார். அதற்கு விளக்கமளித்து நான் பேசியபோது ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னேன். உடற்கூராய்வு முடிந்ததற்குப்பின்பு, இந்த அவைக்கு அதனை நான் தெளிவுபடுத்துவேன் என்று சொல்லி இருந்தேன். அதுகுறித்த தகவல் என்னவென்றால், திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் மது விலக்கு வழக்கு பதிவு செய்து 26-4- 2022 அன்று கைது செய்யப்பட்ட தங்கமணி, கிளைச் சிறைச்சாலையிலே ஒப்படைக்கப்பட்ட பிறகு அவருக்கு வலிப்பு ஏற்பட்ட காரணத்தால் 27- 4- 2022 அன்று மரணம் அடைந்திருக்கிறார். மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து, நீதித் துறை நடுவர் அவர்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உடற்கூராய்வு முடிக்கப்பட்டது.

stalin

காவல் துறை வடக்கு மண்டலத் தலைவர், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இறந்தவரின் உறவினர்களிடம் நடந்த சம்பவங்களையெல்லாம் கூறி, மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளையெல்லாம் காண்பித்து விளக்கி, புலன் விசாரணை நியாயமாக நடத்தப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டு, இறந்தவரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கு விசாரணை மாநில குற்றப் புலனாய்வுத் துறைக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது. தங்கமணியைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிய காவல் துறையினர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு விட்டார்கள். மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறையின் புலன் விசாரணை அறிக்கையின்படி, அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்பதை இந்த மாமன்றத்திற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.