ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் இரங்கல்

 
stalin

அருணாசல பிரதேச மாநிலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அருணாச்சலப் பிரதேசம் மாநிலம் சங்கே கிராமத்தில் இருந்து  நேற்று காலை 9  மணியளவில் ராணுவ ஹெலிக்காப்டரில்  லெப்டினன்ட் மற்றும் மேஜர் ஆகியோர், அசாம் மாநிலம் சோனிப்பூர் நோக்கி புறப்பட்டுள்ளனர்.  ஆனால் புறப்பட்ட 15 நிமிடங்களில்  விமானிகள் உடனான தகவல் இணைப்பு தொடர்பை இழந்துள்ளது.  இதனையடுத்து  போம்டிலாவின் மேற்கே மண்டலா ஹில்ஸ் பகுதிக்கு அருகே ஹெலிக்காப்டர் விபத்துக்குள்ளானது தெரியவந்தது.  ஹெலிகாப்டர்  விழுந்து நொறுங்கிய  அதே பகுதியில் 2 பைலட்டுகளின் உடலும் கண்டறியப்பட்டது. பனிமூட்டம் காரணமாக மலைமீது மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விபத்தில் இறந்த விமானிகள் லெப்டினன்ட் ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் என்பது  அடையாளம் காணப்பட்டது. இதில் மேஜர் ஜெயந்த் தமிழ்நாட்டில் உள்ள தேடி மாவட்டத்தைச்  சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர்களது உடல்கள் டெல்லி விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- அருணாசல பிரதேச மாநிலத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், ஜெய மங்கலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த்துக்கு எனது வீர வணக்கத்தை செலுத்துகிறேன். அவரது பிரிவால் வாடும் சக ராணுவ வீரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறி உள்ளார்.